1.
அதிகாலைக் குளிரில்
சிறுபறவையொன்று
தன் மெல்லிய அலகால்
கொத்தித் தின்னும்
தானியங்களில் ஒன்றாக
நான் இருக்கக் கூடாதா?
2.
வெகுநாளாய்
நினைவிலிருந்த
பெண்ணொருத்தி
கடந்துபோய் போய்விட்டாள்
தேவீ
என்றழைத்தேன்
ஒரு நூறு தேவிக்கள் திரும்பிப் பார்த்தனர்
பட்டணம் பல்லை இளித்தது.
3.
ந
கு
ல
னு
கு
கு
ம்
எனக்கும்
என்ன இருக்கிறது
எல்லாம்.
4.
அவளொருத்தி
குளிரும்
கதகதப்புமாய்
உள்
பயணிக்கும்
555 புகையென.
5.
நாயோ
என்று
திரும்பிப்
பார்த்தேன்
நிழல்தான்.
6.
தாங்கவியலாப் பிரிவில்
என் மனம்
கணப்போழ்தும்
காற்றில் கலந்திட
துடித்துக் கொண்டே
யிருக்கிறது.
7.
ஒரு
பொருளை
காணவில்லை
நூறு
திருடர்கள்
கிடைத்தார்கள்.
8.
பட்டம் விடும் சிறுவர்களைப் பார்த்ததும்
நினைவு வந்தது
இன்று பௌர்ணமி
தலை உயர்த்திப் பார்த்தேன்
நிலா பறந்து கொண்டிருந்தது
9.
உறங்க மறுக்கிறது உனதழகு.
10.
ரத்தமும் சதையுமான
நம்மைப் பகிர்ந்துகொள்வோம்
உலகக் கவிதைகள் குறித்து
பிறகு யோசிக்கலாம்.
11.
ஒரு மயிரும் செய்யாத கவிதையை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.
12.
முல்லை மலர்
அறியுமா
பாரியின் தேரை
அதற்கு முன்?
13.
பூஜ்யம்
ஒரு
பிரம்மாண்ட
பூஜ்யம்.
14.
கிணற்றுக்குள்
எட்டிப் பார்த்தேன்
ஒரு
காகம்
தெரிந்தது.
15.
யாருக்கும் தெரியாமல்
ஒளித்துவைத்துவிட்டு
தூங்கப்போனேன்
விடிந்ததும் எழுந்துபார்க்கையில்
அது எல்லோர் கைகளிலும் இருந்தது.
16.
உயிரற்றிருப்பதை
உணர முடிகிறது
உயிரோடிருக்கயிலேயே .
17.
மழை போலவே தான்
இருக்கிறது
மழை பற்றிய தகவலும்.
18.
சொல்லவே முடியாத
உணர்வுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
வெகுநேரமாய்
அடித்தொண்டையில் மிதந்துகொண்டிருக்கும்
இந்த
மசாலா டீயின் காரத்தைப் போல.
19.
ஒரு உண்மயைச் சொல்கிறேன்
நம்புவது உங்கள் விருப்பம்
பாதிக்கு மேல்
உண்மையில்லையென்றால்
வட்டம் சதுரமாகிவிடும்
20.
எங்கள் அறைக்கு
குபேரர் படம் போட்ட
ஒரு காலண்டர்
வந்திருக்கிறது.
21.
வெண்சாமரங்கள்
விடுமுறையிலிருக்கின்றன
நிமிர்த்திவைக்கப்பட்டிருக்கிறது
துடைப்பம்
மந்திரிகள் முணுமுணுப்பது
அரசருக்குக் கேட்காமலா இருக்கும்?
22.
விதவிதமாய் வெளிப்படும்
அம்மாவின் திட்டுக்களைப் போலிருந்தது
நகரப் பேருந்தின்
ஹாரன் சப்தம்.
அடுத்த வாரம்
ஊருக்குப் போகவேண்டும்.
23.
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு கலரில்
டீ போட்டுத்தரும்
எங்கள் தெரு
டீக்கடை மாஸ்டருக்கு
வால்ட் டிஸ்னி என்று
பெயர் வைத்திருக்கிறேன்.
24.
பிரவாகமெடுக்கும்
கீபோர்டின் இசையைப்போல
ஒரு கவிதை
எழுதவேண்டும் போலிருக்கிறது.
25.
பதாகைகள் போல
கொட்டிவைத்திருக்கிறேன்
கொடாங்குச்சிகளை .
26.
யாருமற்ற பொழுதில்
எல்லோருமாகப் பார்த்து
யாருமே இல்லாமல்
நானுமற்றுப் போனேன்.
27.
முத்தங்கள் தீர்ந்த ஒரு
வினாடியில்
அந்தக் குழந்தையைப் பார்த்தேன்
முத்தங்கள் நிறைந்த ஒரு கூடையை
எனக்கது பரிசளித்தபோதுதான்
குழந்தைகள் முத்தங்களின் கடவுள்கள்
என்று தோன்றிற்று.
ஆனாலும் அந்தக் குழந்தை
ஒரு கவிதை கேட்டு
அடம்பிடிக்குமென்று நான்
நினைத்துக்கூட பார்க்கவில்லை.
28.
திறந்த நீரிலிருந்து
வந்த நுரை காணாமல் போய்
கொஞ்ச நேரத்தில்
நான்
அங்கிருந்தேன்
இங்கும் இருந்தேன்.
29.
வெகுநேரக் காத்திருப்பை
கவனித்த மீன்கள்
என்னுடையது
கடலுக்கான தூண்டிலென நினைத்து
அருகில் வரவே மறுத்துவிட்டன.
30.
தினமும்
மின்மயானத்தை சுற்றிப்போகிறேன்
அமைதி
மயான அமைதி.
31.
ரோஜாவின் முகவரி
வனம்
வனத்தின் முகவரி
ரோஜா
ஒன்றின் முகவரி ஒன்று
என்றாகிப்போன ஒன்று.
32.
தாங்கிக்கொள்ளவே முடியாமல்
சில விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
சொல்லியோ எழுதியோ அழுதுதீர்த்தோ
எப்படியும் கரைவதில்லை அவை.
எவரின் தோல்சாய்தலிலும்
மறக்காமல் தன்னிஷ்டக் கோடுகளை
வரைந்தழித்துப் பார்த்துக் கொள்கின்றன.
கூடவே உணர்வில்லாத புன்னகையொன்று
ஒட்டினாற்போல வந்துவிடுகிறது.
மெல்லிய காற்றில் வீழுமிலையாய்
தொடுத்துக்கொண்டிருந்தாலும்
அசையும் மனசின் கிளையொன்றில்
ஆழமாய்ப் பதிந்திருப்பதை உணரமுடிகிறது
அவற்றின் நீண்ட நாளைய இருப்பில்.
33.
எங்கள் வீட்டில் அந்த மிருகம்
நுழைந்தேவிட்ட போது
அலறக்கூட இயலாத
வழக்கத்திலிருந்தோம்
மாறாக
தயாராகிக்கொண்டிருக்கும் தேநீருக்கு
சர்க்கரை அளவைப்பற்றி
சொல்வதிலேயே
முனைப்பாயிருந்தோம்.
34.
யார்க்கர் பற்றி
ஒரு கவிதை எழுதவேண்டும்
எவ்வளவு
துல்லியமாக வருமென்று
தெரியாததால்
இப்போதைக்கு ஒத்திப்போட்டிருக்கிறேன்.
35.
எல்லாவற்றிற்கும்
எல்லாமும்
தொலைந்து போயிற்று
அதனதன் பெயர்களைத்தவிர.
37.
இலவசமாய் வந்த ராசிபலன்
இரவல் போய்விட்டது
ஓசியில் வாங்கியவன்
ஒய்யாரமாய் நடக்கிறான்
காசு கொடுத்து வாங்கியவன்
பாவங்களுடன் திரிகிறேன்
கொடுத்த புத்தகத்தை
திருப்பி வாங்கும்
பரிகாரம் தெரியாமல்.
38.
தூக்கத்தில்
சிரிப்பதை
வியாதியென்கிறார்கள்
சிரிப்புதான் வருகிறது.
39.
மனதில் இருப்பதை
இருப்பது போலவே
யாரிடமும்
சொல்லமுடியவில்லை
அப்படி ஏன் முடியவில்லை
என்பதையும் சேர்த்துதான்.
40.
சமூகப் பிரக்ஞை
வேண்டுமென்றான் ஒருவன்
பிரக்ஞை என்றால்
என்னவென்று தெறியாமலேயே
ஆமாம் என்பது போல
தலையாட்டி வைத்தேன்.
41.
கிரிக்கெட் விளையாடத்தான்
புறப்பட்டோம்
மைதானம் முழுக்க
காலியாயிருந்ததால்
ஃபுட்பால் விளையாடத் துவங்கிவிட்டோம்.
42.
ஈசலைப் பிடிக்க
காத்திருக்கும் பல்லியை
உற்றுப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம்
அதுவும் என்னை
உற்றுப்பார்த்தது.
43.
மின்னலில் ஒளிரும்
மதிற்சுவர் கண்ணாடிகள்
அறிந்திருக்குமா
தன்
இடம் பொருள் காரணத்தை?
44.
‘தீம்தரிகிட தீம்தரிகிட ‘
என்றான் நண்பன் திடீரென்று.
திரும்பிப் பார்த்தேன், நல்லவேளையாய்
ஈட்டிக்காரன் எவனும்
வரவில்லை.
45.
விடுமுறை நாளொன்றில்
வைத்த விநோத ரசமஞ்சரியால்
அடுத்து இவன்
அடுப்படிக்குள்
அனுமதிக்கப்படவேயில்லை.
46.
வாழ்க்கையும்
ஐபிஎல் போலத்தான்.
ஒருகட்டம் வரைக்கும்தான்
லீக் போட்டிகள்
அப்புறம் நாக்-அவுட்தான்..
47.
நீர்மூழ்கிக் கப்பல்கள்
நீரில் மூழ்குவதில்லை
என்பது எவ்வளவு அதீதமோ
அப்படியே என்
நேர்மையும்.
48.
மந்திரம் ஒன்றை
கற்க வேண்டும்
நானே தொலைந்துபோக.
49.
சொல்ல ஒன்றுமில்லை
அல்லது
சொல்ல இயலவில்லை.
50.
நிலவெரியும் காட்டுக்குள்
யாழிசைத்துக் காத்திருக்கிறேன்.

அன்புடையீர்
தங்களின் கவிதைகளை சாருநிவேதிதா அவர்களின் இணையதளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும்
தங்களில் கவிதைகளில்
ஒரு மயிரும் செய்யாத கவிதையை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த கவிதை அடிமனதை ஆழமாக இரணமாக்கி விட்டது.
கவிதை ஆயிரம் செய்யும். பாரதியின் கவிதை இன்றும்
கோடி அலைகளை எல்லோர் மனதிலும் எழுப்புகிறது.
நீங்கள் காலம் கடந்தாலும் வாழும் கவிதைளை எழுதுவீர்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
எல்லாக் கவிதைகளும் ஆழமாக பாதிக்கின்றது.
நாயோ என்று/ திரும்பிப் பார்த்தேன் / நிழல்தான்
இந்தக் கவிதையை\
படித்தபின்
எனது அழுகை
ஓலம்
அதிகமானது
தனுஷ்